தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு மற்றும் பெருநிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதி உதவியுடன் இலவசமாக தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்த மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், மாநகராட்சி துணை கமிஷனர் மணிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/07/E65qLKVVIAEYGLR-1024x682.jpeg)
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/07/E65qLKVVIAEYGLR-1024x682.jpeg)
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அரசு ஜூலை மாதத்துக்கு தமிழகத்துக்கு 72 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தடுப்பூசி போட கர்ப்பிணி பெண்கள் உட்பட யாரையும் வற்புறுத்தவில்லை.
தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி போட வற்புறுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மா.சுப்பிரமணியன் கூறினார்.
அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகளின் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்டவை குறித்து கொரோனா பேரிடர் காலம் முடிந்தவுடன் அனைத்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.