பாகம் 2: நிறைவு தராத கட்டடம்!.
பாகம் 1 Link :
ஜேம்ஸ் பூங்காவில் 1674ல் ஏற்பட்ட மிகப் பெரிய தீவிபத்திற்குப் பின்னர் அடுத்த கால் நூற்றாண்டுக்கு அந்த இடம் வெறும் தரிசாகத்தான் கிடந்தது. அன்றைய உலகின் வல்லரசு நாடான இங்கிலாந்தில், அதன் தலைநகரமான லண்டனின், 4 ஏக்கருக்கு ஒரு நீண்ட நிலம்… செல்வந்தர்களின் கண்களைப் பறிக்கத்தான் செய்தது.
கி.பி.1702 ஆம் ஆண்டில் ஜான் ஷெபீல்டு என்ற பெயர் கொண்ட ஒரு பிரபு அந்த நிலத்தை வாங்கினார். அந்தப் பெரும் இடத்தில் ஒரு கனவு மாளிகையைக் கட்ட வில்லியம் விண்டே, ஜான் பெட்ச் என்ற இரண்டு சிறந்த கட்டிடக்கலை நிபுணர்களை அவர் பணியமர்த்தினார். 1705ஆம் ஆண்டில் அங்கு பக்கிங்ஹாம் அரண்மனை கட்டி முடிக்கப்பட்டது. சரி, அதென்ன பக்கிங்ஹாம் அரண்மனை?
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/03/will-4-1024x1003.jpg)
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/03/will-4-1024x1003.jpg)
இங்கிலாந்து அரசின் ஆனி-யின் தயவால் ஜான் ஷெபீல்டுக்கு ‘டியூக் ஆஃப் பக்கிங்ஹாம்’ அதாவது பக்கிங்ஹாம் பகுதியின் பிரபு – என்ற பட்டம் 1703ல் கிடைத்தது. அந்தப் புதிய பதவியில் அமர்ந்த முதல் நபர் அவர்தான் என்பதால் அவரை எல்லோரும் ‘பக்கிங்ஹாம் பிரபு’ என்றே அழைத்தனர். அவரது புதிய பெயரை அடிப்படையாகக் கொண்டே பக்கிங்ஹாம் அரண்மனை பெயரிடப்பட்டது.
ஆறு ஓய்வு விடுதிகள், 40 குதிரை கட்டும் லாயங்களோடு கூடிய மிகப் பெரிய அரண்மனையை கட்டிய ஜான் ஷெபீல்டு அந்த இடத்தின் இராஜாவாக தன்னை உணர ஆரம்பித்தார். விதி யாரை விட்டது?, 1714ல் இங்கிலாந்து ராணி ஆனி இறந்துவிட பக்கிங்ஹாம் பிரபு தனது பதவியை இழந்தார். அரச குடும்பம் தனது பதவியை மீண்டும் தரும் என்ற நிறைவேறாத நம்பிக்கையோடும் கண்ணீரோடும் 1721ல் ஜான் ஷெபீல்டு பக்கிங்ஹாம் அரண்மனையில் இறந்து போனார். அவருக்குப் பின்பு அந்தப் பதவி அவரது வாரிசுகளுக்குக் கூட கிடைக்கவில்லை!.
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/03/george-3-1024x724.jpg)
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/03/george-3-1024x724.jpg)
ராசி எப்படி இருந்தாலும், பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரமாண்டத்திற்கும் சொகுசு வசதிகளுக்கும் குறைவே இல்லை. அதனால் அந்த அரண்மனையை வாங்கப் பலரும் பேரம் பேசினர். ஆனால் அந்த அரண்மனையை வைத்திருந்த ஜான் ஷெபீல்டின் விதவை மனைவி வரலாறு காணாத தொகையை எதிர்பார்த்ததால் அந்தக் கட்டிடத்தைப் பிறரால் வாங்க முடியவில்லை. மொத்த இங்கிலாந்தும், ‘யாருக்குத்தான் போகப் போகிறது இந்த அரண்மனை?’ – என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோதுதான், 1761ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசர் மூன்றாம் ஜார்ஜ் அந்த அரண்மனையை வாங்கினார். அரசரே வாங்க விரும்பியதால் ஜான் ஷெபீல்டு குடும்பத்தினரும் விலையைக் குறைத்துக் கொடுத்தனர்.
மூன்றாம் ஜார்ஜ் இந்தக் கட்டிடத்தை வாங்கும்போதே ‘இது ஆண்களுக்கு… மிக முக்கியமாக அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆகாத கட்டடம்’ என்ற வதந்தி இருந்தது. அதனால்தானோ என்னவே பக்கிங்ஹாம் அரண்மனையை அரசி சார்லட்-டிற்கு அவர் கொடுத்தார். அவர் அங்கு வசிக்கவேயில்லை.
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/03/bakhinham.jpg)
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/03/bakhinham.jpg)
மூன்றாம் ஜார்ஜ் இறந்த பின்னர் ஆட்சிக்கு வந்த அரசர் நான்காம் ஜார்ஜ்தான் தான் வளர்ந்த பக்கிங்ஹாம் அரண்மனையிலேயே முடி சூட்டிக் கொண்டு, அதையே அரசரின் அரண்மனையாக அறிவித்தார். மீண்டும் ஒரு ஆணின் தலைமையின்கீழ் அந்த இடம் வந்தது.
பக்கிங்ஹாம் அரண்மனையில் ஏதோ ஒன்று குறைவதாக நான்காம் ஜார்ஜ் அரசருக்குத் தோன்றியது. அதனால் அன்றைக்குக் கட்டுமானக் கலையில் பிரபல வல்லுநராக இருந்த ஜான் நாஷ் என்பவரைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்டார். அந்த மொத்தக் கட்டிடமுமே சரியில்லை என்பதே ஜான் நாஷ்சின் நிலைப்பாடாக இருந்தது, பக்கிங்ஹாம் அரண்மனையை மொத்தமாக இடித்துவிட்டு புதிய அரண்மனை கட்டலாம் என அவர் கூறினார். ஆனால் நான்காம் ஜார்ஜ் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
பதவிக்கு வரும்போதே 60 வயதில் இருந்த நான்காம் ஜார்ஜ், புதிய மாளிகையைக் கட்டத் தொடங்கினால், அதைத் தனது காலத்திற்குள் முடிக்க முடியும் என்று நினைக்கவில்லை. இருக்கும் மாளிகையையில் ஏதாவது மாற்றங்களைச் செய்தால் போதும் என்று நாஷ்க்கு கூறப்பட்டது. ஆனால் அந்தப் புனரமைப்புப் பணிகள் முடியும் முன்பே நான்காம் ஜார்ஜ் 1830ல் காலமானார்.
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/03/royal-london-king-james-1024x641.jpg)
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/03/royal-london-king-james-1024x641.jpg)
அடுத்த வந்த அரசர் நான்காம் வில்லியம்ஸ்சுக்கு பக்கிங்ஹாம் அரண்மனையைப் பிடிக்கவேயில்லை. வேறு இடத்தில்தான் தங்கினார். அரண்மனையின் சில பகுதிகளை இடித்துக் கட்டியும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. மொத்தமாக அரண்மனையை இடித்துக் கட்டுவதற்கு பதில் அந்த அரண்மனையை விற்றுவிடலாம் என்று அவர் நினைத்தார். அது தொடர்பாக ஆலோசனைகளும் நடத்தத் தொடங்கினார்.
ஆனால் இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றம் அரண்மனையை விற்க ஒப்புக் கொள்ளவில்லை. வேறு வழியே இல்லை… இந்த அரண்மனையை சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும் என நான்காம் வில்லியம்ஸ் ஏற்றுக் கொண்டு அங்கு நிரந்தரமாகக் குடியேற நாள் குறித்தார், அந்த நாளுக்கு முன்பாகவே மரணம் அவருக்கு நாள் குறித்தது. பக்கிங்ஹாம் அரண்மனையில் குடியேறும் முன்பே 1837ஆம் ஆண்டில் அரசர் நான்காம் வில்லியம்ஸ் இறந்துபோனார்.
அரண்மனைதான்… ஆனாலும் அரசர்கள் அங்கு வாழ்ந்தது இல்லை. இந்த சாபக் கதைக்கு இன்னும் சில அத்தியாயங்கள் உள்ளன…
தொடரும்…