சென்னை :
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு முன்னாள் காவல்துறை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கடிதம் எழுதி உள்ளார். அதில் கர்நாடக மாநிலத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஒன்று சிலைகள் மற்றும் கல்வெட்டுகளுடன் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
கர்நாடகாவின் கோட்டேகிரி என்ற கிராமத்தில் சில ஆண்டுகள் முன்பு ஒரு சிவன் கோவில் கட்டப்பட்டது. அந்தக் கோவிலின் அருகே இராஜராஜ சோழனின் முதல் பேரனாகிய ஸ்ரீ உடையார் இராஜாதிராஜ தேவர் என்ற தமிழ் அரசர் குறித்த கல்வெட்டுகள் இருப்பதை 1947ல் ஐரோப்பிய தொல்பொருள் மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். கோட்டேகிரியில் இராஜேந்திர சோழீஸ்வரம் என்ற கோவில் இருந்துள்ளது, இது 949 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் ஆகும்.
இக்கோவிலில் இருந்த பஞ்சலோக சிலைகள் மற்றும் கலைப் பொக்கிஷங்கள் திருடப்பட்டுள்ளன, கோவிலையும் இப்போது காணவில்லை. கோட்டேகிரியில், 949 ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னரால் கட்டப்பட்ட இராஜேந்திர சோழீஸ்வரத்தை இடித்துவிட்டு புதிதாக சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளதா? – என்பதை தொல்லியல் துறை வாயிலாக ஆய்வு செய்ய வேண்டும். அங்கு திருடப்பட்ட சிலைகள் மற்றும் கலைப் பொக்கிஷங்களை மீட்டு தமிழகத்திற்கு எடுத்து வர வேண்டும். கோட்டேகிரியில் கண்டெடுக்கப்பட்ட சோழர் காலக் கல்வெட்டைத் தமிழகத்திற்கு கொண்டு வந்து அரிய பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் – என்று பொன்.மாணிக்கவேல் குறிப்பிட்டு உள்ளார்.
ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தமிழ் அரசர்களின் கல்வெட்டுகள் சிதைக்கப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்த நிலையில், இப்போது ஒரு பெரும் கோவிலே காணாமல் போயுள்ளது வரலாற்று ஆர்வலர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது!.