சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும், செய்தி ஊடகங்களில் அதிகம் புறக்கணிக்கப்படும் ஒரு செய்தி பரந்தூரில் தொடரும் மக்கள் போராட்டம். தங்கள் நிலத்தைக் காக்க டெல்லியில் விவசாயிகள் போராடிய போது அங்கு செய்தியாளர்களை அனுப்பிய ஊடகங்கள் கூட, சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரைக் கண்டுகொள்ளவில்லை. என்னதான் நடக்கிறது பரந்தூரில்? போராட்டத்தின் பின்னணி என்ன?.
பரந்தூர் விமான நிலையம்
பசுமையான நெல் வயல்கள், அவ்வப்போது வாகனங்கள் வந்து செல்லும் சாலைகள், வீடுகள், எப்போது நீர் நிறைந்திருக்கும் ஏரிகள், 1940களில் கட்டப்பட்ட ஒரு தொடக்கப் பள்ளி ஆகியவற்றைக் கொண்ட ஒரு கிராமத்தின் பெயர் நெல்வாய். தற்போது பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக முற்றிலும் அழியப்போகும் கிராமங்களில் நெல்வாயும் ஒன்று.


பாதிக்கப்படும் மக்கள்
சென்னையில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக நெல்வாய் போன்ற 13 ஊர்களில் உள்ள பொது மக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் நான்கு கிராமங்கள் மொத்தமாக அழியப்போகின்றன. கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தில் குடியிருப்புகள்,விவசாய நிலங்கள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், பள்ளிக்கூடங்கள், கோயில்கள் போன்றவை அடங்கியிருக்கின்றன. குடும்பங்களாக மட்டும் சுமார் 1000 குடும்பங்கள் அகதிகளாக வெளியேறும் சூழலில் உள்ளனர். அதிகமாக மக்கள் வசிக்கும் கிராமம் ஏகனாபுரம். இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாள்தோறும் மக்கள் இங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இப்படியாகப் பரந்தூர் திட்டத்தால் பாதிக்கப்பட உள்ள இடங்களின் பட்டியலில் சென்னையும் இருக்கின்றது!. சென்னையின் வெள்ளநீர் வடியும் பகுதிகளில் பரந்தூரும் ஒன்று என்பதால் பரந்தூரில் அமையும் விமான நிலையத்தால் சென்னையின் வெள்ள பாதிப்பும் அதிகரிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
கண்டுகொள்ளாத அரசாங்கம்
பரந்தூரில் அமைய இருக்கும் விமான நிலையம் மாநில வளர்ச்சியின் படிக்கட்டு என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடுகிறார். தற்போது இருக்கும் சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் மேற்கொண்ட பிறகு ஏழே ஆண்டுகளில் அதிகபட்ச பயணிகள் கையாளும் அளவை எட்டிவிடும் என்று முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.
அதே சமயம் இங்கு தங்களின் சொந்த நிலத்தை இழக்க இங்குள்ள விவசாயிகளுக்கு விருப்பம் இல்லை ஆகவே 200-வது நாளாக பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உரையாற்றினார்.


அவர் ”பரந்தூர் மற்றும் அதைச்சுற்றியிருக்கும் 13 கிராம மக்கள் வீடுகளையும், வழிபாட்டுத் தலங்களையும், தங்களுடைய விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும் இடித்து தரைமட்டமாக்கி, விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி உருவாக்கப்படும் பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என 200-வது நாளாக அமைதியான அறவழியில் போராடி வருகிறார்கள்.
மத்திய அரசு நிர்பந்திக்கிறது என்பதற்காக தமிழ்நாடு அரசு அதற்குத் துணை போவதா… அ.தி.மு.க-வுக்கும், தி.மு.க-வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பரந்தூரைச் சுற்றி முதலீடு செய்திருக்கின்றன. விமான நிலையம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. ஆனால், மத்திய அரசின் பிரதிநிதிகள் யாரும் கிராம மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மக்களிடமிருந்து நிலங்களைக் கையகப்படுத்தி, மத்திய அரசிடம் தரும் பணியை தமிழ்நாடு அரசு செய்துவருகிறது.
இந்த மக்களின் கோரிக்கை, ‘வீட்டில் ஒருவருக்கு மத்திய மாநில அரசுகளின் வேலையும் வேண்டாம்… எங்க நிலத்துக்கு ஒரு கோடியும் வேண்டாம்… எங்களை எங்கள் கிராமத்தில் நிம்மதியாக வாழ விடுங்கள் அது போதும்’ எனக் கேட்கிறார்கள். ஒருவேளை போராடும் இந்த மக்கள், ராணுவம் அல்லது காவல்துறையின் மூலமாக அச்சுறுத்தப்பட்டு, மிரட்டப்பட்டால் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்” எனத் தெரிவித்தார்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய நிலையில், அந்த அமைப்பை சேர்ந்த வெற்றி செல்வன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பதிவில், “விவசாயநிலங்களையும், வாழ்விடங்களையும் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிற அத்திட்டத்தை எதிர்த்து இறுதிவரை அம்மக்களோடு நாம் தமிழர் கட்சி துணைநிற்கும், சனநாயகப் போராட்டம், சட்டப்போராட்டமென என எல்லாநிலையிலும் அத்திட்டத்திற்கு சமரசமின்றி களத்தில் நிற்போமெனவும் உறுதிகூறுகிறேன்.”
போராட்டத்தின் தொடக்கநிலையிலேயே பரந்தூர் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுபோல, மீண்டும் அம்மக்களைச் சந்திக்க நானே நேரடியாகக் களத்திற்குச் செல்வேன். சூழலியல் அமைப்புகளையும், சமூக ஆர்வலர்களையும் அடக்கி ஒடுக்குவதுபோல, அப்போது முடிந்தால் என்னைத் தடுத்துப் பார்க்கட்டும்!” எனப் பதிவு செய்துள்ளார்.
தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் 80 சதவிகிதம் பேர் சென்னையைச் சாராதவர்கள். கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி போன்ற இடங்களில் உள்ள விமான நிலையங்களை தரம் உயர்த்தினாலே சென்னையில் நெருக்கடி குறையும் என கூறுகின்றனர் சூழலியல் நிபுணர்கள்


இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிட்கோ சர்வதேச ஒப்பந்தப் புள்ளியை கோரியுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்பம், பொருளாதார அறிக்கை தயாரிப்பது, விமான போக்குவரத்தின் வளர்ச்சியை ஆய்வு செய்வது, மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் பரந்தூர் விமான நிலையத்துக்கு இடையே உள்ள சாலை மற்றும் ரயில் போக்குவரத்து தேவைகள் தொடர்பாக ஆய்வு செய்வது தொடர்பாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.
அதே சமயம் தற்போது பரந்தூர் விவகாரம் பேசு பொருளாகியுள்ளதால் போராட்ட பகுதிகளுக்கு அருகே ஆங்காங்கே காவல்துறையின் வேகத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அங்கு காவல்துறையைச் சேர்ந்தவர்கள் சீருடையிலும், சாதாரண உடையிலும் பணியில் இருக்கிறார்கள். மதுரமங்கலம் சாலை சந்திப்பில் இருந்து பரந்தூர் வரையிலும் காவல்துறையின் கண்காணிப்பு இருக்கிறது தற்போது கூடுதல் பாதுகாப்பு படை அனுப்பியுள்ளது தமிழக அரசு.
இந்திய அரசு விமானப் போக்குவரத்துத் துறையை தனியாருக்கு விற்றுவிட்ட நிலையில், இந்தியா முழுக்க விமான நிலையங்கள் அதானியிடம் விற்கப்படும் நிலையில், ஒரு புதிய விமான நிலையத்திற்காக மத்திய அரசும், மாநில அரசும் கைகோர்த்து செயல்படுவதும், அதற்காக 13 கிராம மக்களின் 200 நாள் போராட்டம் ஒடுக்கப்படுவதும் உண்மையாகவே வளர்ச்சிக்குத்தானா? – என்று மக்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.