கீழடி அகழாய்வில் முதன் முறையாக அதிகபட்சமாக 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடியில் 8 குழிகள் வரை தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை உறைகிணறுகள், மூடியுடன் கூடிய பானை, சுடுமண் பகடை, தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, சிவப்பு பானை, பானை ஓடுகள் உள்ளிட்டவை கீழடியில் கண்டறியப்பட்டுள்ளது. கீறல்களை கொண்ட பானை ஓடுகள் மட்டும் இதுவரை 1,300க்கும் மேற்பட்டவைகள் கீழடியில் கண்டறியப்பட்டுள்ளன.


தற்போது ஏழாம் கட்ட அகழாய்வில் அதிகபட்சமாக 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கிடைத்த பானை ஓடுகளில் அதிகபட்ச எழுத்துகளை கொண்ட பானை ஓடு இதுதான் என கூறப்படுகிறது.
இதற்கு முன்பு அதிகபட்சமாக 7 எழுத்துகள் அடங்கிய பானை ஓடுதான் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் ஆதன், உதிரன் – போன்ற பெயர்கள் இருந்தன. இந்த பானை ஓட்டில் உள்ள எழுத்துகளும் ஒரு குறிப்பிட்ட பெயருக்கு உரியவைதான். அந்த பெயர் என்னவாக இருக்கும்?-என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தமிழக தொல்லியல் துறையினருடன் பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.