கடந்த கால் நூற்றாண்டாகவே துருக்கி பல்வேறு பயங்கர நில நடுக்கங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றது. இப்போதும் துருக்கி உலகின் மிகவும் தீவிரமான பூகம்ப மண்டலங்களில் ஒன்றாக உள்ளது. துருக்கியின் கடந்தகாலமும் எதிர்காலமும் என்ன? – விரிவாகப் பார்ப்போம்.
துருக்கியானது உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புடைய நாடுகளில் ஒன்றாகும், ஏனெனில் இது அனடோலியன் புவித் தட்டில் அமைந்திருக்கிறது. இந்தத் தட்டு யூரேசியாவிற்கு எதிராக வடகிழக்கு நகரும் போது இரண்டு பெரிய நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ளது.
இதனால் ஒரு பெரிய பூகம்பம் துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லை அழிக்கக்கூடும் என்று நிபுணர்கள் நீண்ட காலமாகவே எச்சரித்து வருகின்றனர்.
துருக்கியின் வரலாற்றில் மிக மோசமாக நிலநடுக்கம் 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி ஏற்பட்டது. டுஸ்ஸே நகரில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 புள்ளிகள் வரை பதிவானது. அதில் 17 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
2003ஆம் ஆண்டு பிங்கோல் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 170 க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவானது.


2011ஆம் ஆண்டு 7.2, 5.8 மற்றும் 5.6 ரிக்டர் அளவுகளில் துருக்கி நகரங்களைத் தாக்கிய மூன்று நிலநடுக்கங்களில் 600 பேருக்கு மேல் உயிரிழந்தார்கள்.
2020ஆம் ஆண்டில் 6.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் துருக்கியின் எல்சாயிக் நகரில் நிகழ்ந்தது. இதில் குறைந்தது 40 பேர் பலியானார்கள்.
கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபரில் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த பூகம்பத்தால் கொல்லப்பட்டார். ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில் தற்போது துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6-ஆக பதிவாகியுள்ளது
7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.


அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
துருக்கி, சிரியா இரு நாடுகளில் மொத்தமாக நிலநடுக்கத்தால் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது துருக்கியின் வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன
மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஒரு பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரை பொருளாதார இழப்பு ஏற்படும் என்றும் துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது இரண்டு சதவீதமாக இருக்கும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே நிலநடுக்க அபாயத்தில் உள்ள துருக்கிக்கு எதிர்காலமும் அபாயமாகவே உள்ளதாக புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.