கந்தசஷ்டியும், நாகூர் ஹனிஃபாவும்
தூங்கி எழுந்தேன்… இருபுறமும் பச்சை பசேல். என்ன இடமென்று தேடியபோது சென்னையிலிருந்து 537 கி.மீ தொலைவில் கேசமுத்திரம் என்பது தெரியவந்தது.
காலை 7.14 மணிக்கு இன்னொரு ரயில் நிலையத்தில் நின்றது. சென்னையிலிருந்து 637 கி.மீ தொலைவில் உள்ள வாராங்கல் ரயில் நிலையம் அது. சன்னலோரம் அமர்ந்திருந்தேன். சொல்லவா வேண்டும்?
நிற்கும் நிறுத்தம், நிற்காத நிறுத்தம் நிற்கும் பெயர்ப்பலகை, நிலைய அலுவலகம் என தமிழ் இல்லாத போர்டுகள் தோறும் தமிழ் தேடி தமிழ் தேடி சிரித்து பார்த்தேன். ( முதல் முறை வெளியே வருவதால் இந்த கோளாறு )
மணி 7.45 இருக்கும்.வாராங்கல் தாண்டி உப்பல் அருகே வந்தபோது லேசான சாரல் மழை. எனக்கொன்றும் வித்தியாசமே தெரியவில்லை. மீண்டும் தஞ்சை டெல்டாவின் பழைய பசுமை தான் நினைவுக்கு வருகிறது..
எதிரே இருந்த ஐயா (பாய்) பேசத் தொடங்கினார்.
“மண்டபத்துல எங்க உங்க வீடு” (செல்போனில் பேசியது காதில் விழுந்திருக்கலாம்)
“இல்ல ஐயா.. நா பாம்பன். தீவுக்குள்ள தான் நம்ம வீடு”
“ஒஹ்ஹ். பாம்பனா? மண்டபத்துல நாங்க இறால் கம்பெனி வெச்சுருந்தோம். அப்போ நெதம் ரயில்ல வந்து வந்து போவோம்” என்றார்.
“உன் பேர் என்னப்பா சொன்ன” என்றார்.
“பிரசாந்த்” என்றேன்.
“பெரசாந்தா” என்றார். “ஆம்” என்றேன்.
“சாப்பிடலையா..மணி 7.30 ஆகுதே”
7.30க்கு நேரம் வைத்துச் சாப்பிடும் பெரியவரின் கட்டுக்கோப்பை என் நண்பர்கள் சிலரது டைமிங் டயட்டுடன் பொருத்திக் கொண்டேன்.
“இல்ல ஐயா கொஞ்சம் லேட்டாதான்” என்றேன்.
பிறகு பேசிக்கொண்டே இருந்தோம். ஏதோ வகையில், நாகூர் ஹனிபா வந்து ஒட்டிக்கொண்டார். அவர் ஒரு பாட்டு, நா ஒரு பாட்டு. என் பாட்டுல அவரு திருத்த, அவரு பாட்டுல நா இணையனு ஒரே ஜாலி…
ஆனா பக்கத்துல இருந்த எங்க ஊர்க்காரன் என்ன இஸ்லாம்னு முடிவு பண்ணிருப்பான். அதுக்குப்பிறகு பின்சீட்டில் ஓடிய “அமரர் இடர்தீர் அவமரம் புரிந்த , குமரனடி நெஞ்சே ஏ ஏ ஏ… குறி” என்ற கந்தசஷ்டி கவசத்தை நா சொடுக்கு போட்டு ரசிச்சத அவன் கவனிக்கல..
ஊர் நினைப்பது பற்றி நமக்கென்ன கவலை. சொல்லப்போனால் நாகூர் ஹனிபா பாடல்கள், கந்த சஷ்டி கவசம் இரண்டும் இஸ்லாத்தையோ, இந்துவையோ மையப்படுத்துபவை அல்ல. அதற்கு மேலாக இரண்டுமே எனக்கு இசையாக மட்டுமே நெருக்கம்..
மதிய சாப்பாட்டு நேரம். வாப்பாவுக்கு, அவரது சக தோழர் லெமன் சாதப் பொட்டலம் கொண்டு வந்து கொடுத்தார். அவரிடம் ஏதும் சொல்லாத வாப்பா, என்னிடம் பேசினார்.
“நெஞ்சக்கரிக்கும்னு யோசிக்க மாட்டாய்ங்களே. இதுக்கு 2 சப்பாத்தி வாங்கிட்டு வந்து தந்திருக்கலாம்” என்று புலம்பல் தொனியில் சொன்னார்.
இதற்கிடையில், அவன் (எங்க ஊர்) சாப்பாடு வாங்கியிருந்தான். நான் வாப்பாவிடம் சொன்னேன். அப்போ நீங்க சாப்பாடு சாப்பிடுங்க..நான் லெமன் சாப்பிடறானா கேப்போம் என்றேன்..
அவனும் “சரி ஒகே ஐயா” என்றான்.
வாப்பா மறுத்தார்.
நான் சொன்னேன் “எப்படியும் நான் சாப்பாடு வாங்கனும்ல. நான் சப்பாத்தி வாங்குறேன். நீங்க சாப்பிடுங்க.எனக்கு லெமன்சாதம்னா ரொம்ப புடிக்கும்” என்றேன்.
(எனக்கு லெமன் சாதம் பிடிக்காது. இன்னும் சொல்லப்போனால் எந்த வெரைட்டி சாதமும் பிடிக்காது. நான் மட்டுமல்ல நெய்தல் நிலத்துக்காரர்கள் யாருக்கும் அவை பிடிப்பதில்லை. அது ஒரு தனிக்கதை)
“சரி.. வாங்கு நம்ம பங்குட்டுக்கலாம்” என்றார். மீதம் வரலாறு…
இட்டார்ஸி வந்து சேர்ந்தேன். இதற்கிடையில் மதிய உணவின்போது நாங்கள் (அந்த ராமநாதபுரத்துக்காரன் மற்றும் அப்துல்காதர் (வாப்பா) ) ஏறக்குறைய உறவினர்களாகியிருந்தோம்.
இறங்கப்போவதற்கு 30 நிமிடம் முன் அலாரம் வைத்திருந்தேன். அடித்தது. மெல்ல புத்தகங்களை உள்ளே வைத்துவிட்டு உடை மாற்ற தயாரானேன். பாலாஜி தானே பேசினான்.
“போயிட்டு வாங்க ஜி. சந்திப்போம்”..
“சரிய்யா.. டெல்லி போய்ட்டு கால் பண்னு”
“வரேன்”
“போய்ட்டு கால்பண்றேன்… சரிபாய் பாய் பாய் பாய்”
ஒரு நிமிடம் ரயில் நிலைய வைராக்கியம் ( பிரசவ வைராக்கியம், சுடுகாட்டு வைராக்கியம் போல ) வந்து போனது.
இறங்கினேன்… உடன் யாருமற்று, உதவி கேட்க மொழி தெரியாமல் நான் மட்டும் இந்த ஊரில். இனி நடக்கப்போகும் நல்லது கெட்டத்துக்கெல்லாம் நான் மட்டுமே காரணம்.
இப்போது உடனடியாக நடைமேடை சைல்ட் ஹெல்ப்லைன் பூத் செல்ல வேண்டும். அதற்குள் இப்படி ஆகியிருக்கக் கூடாது.
– தொடரும்
1 comment
[…] மகசூல் – பயணத் தொடர்- பகுதி 2 […]