விரைவில் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும், ஆனால் ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படும் என்று நிதின் கட்கரி அறிவிப்பு.
இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தொடரில் இன்றைய கேள்வி நேரத்தின் போது பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான நிதின் கட்கரி சுங்க சாவடிகள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், சுங்கச் சாவடிகளே இல்லாத நிலையை ஏற்படுத்த மத்திய அரசு முனைந்துள்ளதாகவும், இதன்படி சுங்கச் சாவடிகளில் வண்டிகள் நின்று கட்டணம் செலுத்தும் வழிமுறைக்கு மாற்றாக ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணங்களைப் பெறும் வழிமுறைகளை ஓராண்டுக்குள் அமல்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்படி ஒவ்வொரு சாலையிலும் அதன் தொடக்கப் பகுதி மற்றும் முடிவுப் பகுதியில் கேமராக்கள் இருக்கும் என்றும், அந்தக் கேமராக்களில் பதிவாகும் படங்களின் அடிப்படையில் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும் நிதின் கட்கரி கூறி உள்ளார்.
உலகின் பெரும்பாலான நாடுகளில் சுங்கக் கட்டணம் என்பது சாலையைப் பராமரிக்கும் அளவுக்குதான் உள்ளது. சுங்கச் சாவடியை அமைத்த குறிப்பிட்ட காலத்தில் சுங்கக் கட்டணத்தைக் கைவிடும் வழக்கமும் பல நாடுகளில் உள்ளன. ஆனால் இந்தியாவில் சுங்கக் கட்டணம் தொடர்ந்து அதிகரிக்கப்படுவதோடு, எவ்வளவு காலம் ஆனாலும் சுங்கக் கட்டணங்கள் கைவிடப்படுவதும் இல்லை.
இதனால், சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையையாவது குறைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு, வருங்காலங்களில் சுங்கச் சாவடிகளை நீக்கினாலும் கூட, சுங்கக் கட்டணத்தைக் கைவிடும் எண்ணமே மத்திய அரசுக்கு இதுவரை இல்லை என்பதையே காட்டுகிறது.
நமது நிருபர்