டி.வி.இல்லாத வீட்டில் இருந்து கூகுளின் தலைமைப் பதவிக்கு… சுந்தர் பிச்சையின் தன்னம்பிக்கை வரலாறு!

SHARE

டெக் உலகின் ஜாம்பவான், கூகுளில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்தியர், சுந்தர் பிச்சையின் பிறந்த தினம் இன்று. அவரை பற்றி விளக்குகின்றது இந்த‌ தொகுப்பு..

மதுரையில், டி.வி கூட இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்தான் சுந்தர்பிச்சை. அவரது குடும்பம் சிறுவயதிலேயே சென்னை அசோக் நகர் பகுதியில் குடிபுகுந்தது. நண்பர்கள் மத்தியிலும் அளவாகவே பேசும் சுபாவம் கொண்ட சுந்தருக்கு, ஆரம்ப காலத்தில் ஒரு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவு இருந்தது. பள்ளிக்கூட கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கி வெற்றி வாகை சூடியிருக்கிறார்.

ஆனால் கனவைத் துரத்த குடும்பச் சூழல் ஏதுவாக இல்லை. குடும்பத்திற்காக வருமானம் ஈட்டவேண்டிய நிலை இருந்தது. படிப்பில் கவனம் செலுத்தினார்.

சுந்தர் பிச்சை வகுப்பில் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட்எல்லாம் கிடையாது. ஆனால், எண்களை மனப்பாடம் செய்தல், அறிவியல் விநாடி – வினா, புதிர்களுக்கு விடை காணுதல் இவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சின்ன வயதில் வீட்டில் முதன் முதலாக டெலிபோன் வாங்கியபோது பலரின் டெலிபோன் நம்பர்களையும் மனப்பாடம் செய்து அசத்துவராம்.

+2 முடித்த பிறகு ‘நான் ஐஐடி-யில் படிக்கப் போகிறேன்’ என்று விண்ணப்பித்தார். நண்பர்கள் ஏளனப் பார்வை பார்த்தார்கள். ஆனால், தன் விடாமுயற்சியால் ஐஐடி கரக்பூரில் உலோகவியல் படிப்பதற்கு சீட் கிடைத்தது. கல்லூரியில் பலருடனுடன் சகஜமாகப் பேச ஆரம்பித்தார் சுந்தர். சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டார்.

ஒரு முறை கல்லூரி பாடத்தில் ‘சி’ கிரேட் எடுத்ததற்காக மிகவும் வருந்தப்பட்டார். பின்னர் அதைச் சரிசெய்வதற்காகத் தீவிரமாகப் படிக்க ஆரம்பித்து தன்னை மேம்படுத்திக் கொண்டார். ஐஐடி கரக்பூரில் படித்துக் கொண்டிருக்கும்போது அஞ்சலியை சந்தித்தார். இருவரின் இதயமும் இணைந்ததால் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

படிப்பில் கவனம் செலுத்திய சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்பு வந்தது. ‘இங்கு வந்து படியுங்கள்; உங்களுக்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்’ எனப் பல்கலைக்கழகம் கூறியிருந்தது. அமெரிக்கா செல்வதற்கான பணம் இல்லாத சூழலில், கடன்வாங்கித்தான் அமெரிக்கா சென்றார். அமெரிக்கா சென்றபின், படிப்பின் மீதான ஆர்வம் தொடர்ந்தது. நிறைய படிக்க வேண்டும் என்ற எண்ணமும் சுந்தர் பிச்சையிடம் இருந்தது.

ஸ்டான்ஃபோர்ட்டில் படித்து முடித்தவுடன், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தார். சுந்தர் படிக்கும் காலத்தில், வீட்டுக்கு டெலிபோன் செய்வது கூட‌ முடியாத காரியமாக இருந்தது. கல்லூரி அளிக்கும் உதவித்தொகை சாப்பாட்டிற்கும் பிற‌ தேவைக்கும் சரியாக இருந்தது. எப்போதாவதுதான் வீட்டுக்கு போன் செய்வார். எம்பிஏ படித்து முடித்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். பின்னர், குடும்பத்திற்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற நிர்ப்பந்தம். அதற்காக, மெக்கின்சே (Mckinsey) எனும் கம்பெனியில் சில காலம் வேலை செய்துவந்தார். 2004-ல் தன் மனைவி அஞ்சலியின் ஆலோசனைக்குப் பின், கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

சுந்தர் பிச்சை, முதலில் கூகுள் டூல்பார்- ஐ உருவாக்கினார். அந்தக் காலகட்டத்தில், மைக்ரோசாஃப்டின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் இவை இரண்டுதான் பிரவுசர்களில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. அப்போதுதான், சர்ச் என்ஜின் வைத்திருக்கும் நாம் ஏன் பிரவுசர் வெளியிடக்கூடாது என்று எண்ணம் தோன்றியது. இதை சுந்தர் பிச்சை முதலில் கூகுள் நிறுவத்திடம் சொன்னபோது நிராகரிப்பையே சந்தித்தார்.

ஆனாலும் சுந்தர் பிச்சை அந்த சிந்தனையைக் கைவிடவில்லை. கூகுள் பிரவுசரை தயாரிப்பதற்கான முழுமையான வழிமுறைகளை உருவாக்கி வெற்றி கண்டார். கூகுள் குரோம் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தது. கூகுள் மேப், கூகுள் டிரைவ் என்று பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தினார் சுந்தர் பிச்சை. கூகுளின் வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காக இருந்தார். இதனால், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டது. இவ்வளவு திறமையாக இருக்கும் ஒரு நபர் நம் கம்பெனியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பல்வேறு கம்பெனிகள் சுந்தர் பிச்சையை அணுகின. ஆனால், அவற்றையெல்லாம் சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார். “எனக்கு கூகுள் நிறுவனமே வாய்ப்பளித்தது. நான் கூகுள் நிறுவனத்தில்தான் பணி புரிவேன்” என்று உறுதியாக இருந்தார்.

கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான துணை நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவர, கூகுள் நிறுவனத்தை உருவாக்கியவர்களான லாரி பேஜ், செர்ஜி ப்ரின் ‘ஆல்ஃபபெட்’ எனும் நிறுவனத்தை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தனர். இந்நிலையில், வளர்ந்துவரும் கூகுள் நிறுவனத்தை திறமை உள்ள, நம்பகத்தன்மையுள்ள ஒருவரிடம் ஒப்படைக்க விரும்பினர். 2015-ம் ஆண்டு, கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை செயல்படுவார் என்று லாரி பேஜ் அறிவித்தார். அப்போதுதான், எந்தக் கல்லூரியில் படித்தவர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று ஊடகங்கள் அலச ஆரம்பித்தன.ஒட்டுமொத்த உலகமும் அவரை வியந்து பார்த்தது. சுந்தர் பிச்சை இந்தியர் என்பதால், இந்தியா முழுவதும் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

உலகின் நம்பர் 1 டெக் நிறுவனத்தின் CEO-வாக தமிழகத்தின் பெருமையை உலக அளவிற்கு எடுத்துச்சென்ற மற்றும் ஒருவராக ஆனார் சுந்தர் பிச்சை. தற்போது, ஆல்ஃபாபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். இது, மீண்டும் அவரை உலகளாவிய பேசுபொருளாக மாற்றியது.

கருப்பின மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சுந்தர் பிச்சை ‘நீங்கள் தனியாக இல்லை நாங்கள் உங்கள் உடன் இருக்கின்றோம்’ என்று சொன்னார். அண்மையில் யூடியூப் நடத்திய `Dear Class of 2020’ல் பேசிய சுந்தர் பிச்சை மாணவர்களுக்குத் தெரிவித்த செய்தியில் “உங்களுக்குப் பிடித்ததை மட்டுமே செய்யுங்கள். மற்றவர்களுக்காக ஒருபோதும் உங்கள் செயல்களை மாற்றாதீர்கள். அதுதான் எதிர்கால வெற்றிக்கான வழியும் கூட” என்றார். உண்மைதான் அதனை செயல்படுத்தியல்தான் இன்று டெக் ஜான்பவனாக வலம் வருகின்றார்.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார் : கடுப்பான கே.எஸ். அழகிரி!

Admin

இனி சூப்பராக போட்டோ எடுக்கலாம்… செல்ஃபிக்கு எதிராக இணையத்தில் வைரலாகும் புதிய செயலி

Admin

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் தான் உள்ளது – அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

Admin

சமூக வலைதளங்களில் திரும்பும் திசையெல்லாம் ரங்கன் வாத்தியார் மீம்ஸ் !

Admin

விஜய்யை நீதிபதிகள் விமர்சித்தது தேவையில்லாதது: முன்னாள் நீதிபதி சந்துரு அதிருப்தி

Admin

தமிழ்நாடு பட்ஜெட் 2024 -25 என்னதான் சொல்கிறது? 116 குறிப்புகளில் முழு பட்ஜெட்

Admin

ஒரே நாளில் 1000 சிறார்களுக்கு கொரோனா!.

ஐபிஎல்-லில் தனது முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே. வெற்றியைத் தவறவிட்டது!

சே.கஸ்தூரிபாய்

வள்ளுவர் கிறிஸ்தவரா? – தொல்.திருமாவளவனின் பேச்சு ஏற்புடையதா?

இரா.மன்னர் மன்னன்

அடுத்த 5 மாதத்திற்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ இலவசம் – அதிரடி அறிவிப்பு

Admin

புதிய கல்விக் கொள்கை வேண்டாம்…. புறக்கணித்த தமிழக அரசு!

Leave a Comment