நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பிப்வரி 1ல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதையடுத்து அடுத்தடுத்து அமர்வுகள் நடைபெற்றன.
அதில் அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்க, இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் தொடர்ந்து அமளி செய்தனர். இதனால் சபை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வந்தன. இந்நிலையில்தான் நேற்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களின் உரையைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.


இந்த உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி முந்தைய காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் புலியை வேட்டையாட சென்ற 2 பேரின் கதையை கூறி முந்தைய காங்கிரஸ் ஆட்சியை பிரதமர் மோடி கடுமையாக சாடினார். இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
கடந்த 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்த கூட்டணி ஆட்சியில் ஒவ்வொரு வாய்ப்புகளும் நெருக்கடியான நிலையாக மாறின.
காங்கிரஸ் ஆட்சியில் வேலைவாய்ப்பின்மையை நீக்கியதாக கூறியதற்கு ஒரு கதையை கூறலாம். அதாவது ஒரு காட்டுக்குள் 2 பேர் புலியை வேட்டையாட செல்கிறார்கள். அவர்கள் எடுத்து சென்ற துப்பாக்கியை காரிலேயே வைத்துவிட்டு கீழே இறங்கி காட்டுக்குள் சென்றனர்.


இந்த வேளையில் திடீரென்று புலி வந்துவிட்டது. இதை பார்த்து அதிர்ந்தவர்கள் துப்பாக்கியை தேடினர். அப்போது தான் துப்பாக்கியை காரில் வைத்துவிட்டு வந்ததை புரிந்து கொண்டனர். இருப்பினும் தங்களின் பாதுகாப்புக்காக புலியிடம் இருந்து தப்பிக்க துப்பாக்கிகளின் லைசென்ஸை காண்பித்து தப்பித்ததாக கதை ஒன்று சொல்வார்கள்


இந்த கதையை போன்றது தான் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மையை போக்கியது என்பது. வெறும் வாய்வார்த்தைகளாகவே வேலைவாய்ப்பு பிரச்சனையை நீக்கியதாக கூறினார்கள். ஆனால் அந்த ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யப்படவில்லை. வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படவில்லை” என பிரதமர் மோடி கூற அவையில் இருந்த பாஜகவினர் கைதட்டினர்.
ஆனால் உலக அளவில் பேசு பொருளாக உள்ள அதானியின் முறைகேடுகள் பற்றி பிரதமர் எங்கும் வாய் திறக்கவே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.