”இறுதி வார்த்தை…” மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் – 05.

SHARE

புகழேந்தி என கையெழுத்து போட்டு விட்டு நிமிர்ந்தான்.

அதே நேரம் மிகச்சரியாக ஒரு காவலர் அவனுக்கு எதிரே அவனைப் பார்த்தவாறு வந்து கொண்டிருந்தார்.

ஆம்புலன்ஸ் ஊழியரும் விடைபெற்றுக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்.

“சார் நான் கிளம்புறேன். ரொம்ப தாங்க்ஸ் சார்..”.

உடனே சுதாரித்துக் கொண்ட புகழேந்தி ,


” கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. அங்க பாருங்க போலீஸ்காரா் ஒருத்தர் வந்துட்டு இருக்காரு.. அவருக்கிட்ட என்ன நடந்துச்சுனு சொல்லிட்டு போங்க… தேவையில்லாம என்னை பிரச்சனையில சிக்க வச்சுட்டு போயிடாதீங்க..” என்றான்.

” சார் நீங்க பயப்படுற அளவுக்கெல்லாம் இது பெரிய பிரச்னையில்ல.. வழக்கம்போல விசாரிப்பாங்க.. என்ன நடந்துச்சுனு சொல்லிருங்க… நீங்க சொல்றதை ஸ்டேட்மெண்டா எழுதிகிட்டு கையெழுத்து கேப்பாங்க… அவ்ளோதான்… இதுக்கு எதுக்கு சார் பயப்படுறீங்க… நான் கிளம்புறேன் சார்.. ” என்றான்.

” பார்த்தியா உன் வேலை முடிஞ்சதும் கிளம்பிப் போறியே.. அவரு என்கிட்ட பேசிட்டு போற வரைக்கும் கூட இருப்பா.. “

” அய்ய இன்னா சார் இப்படி பயப்படுறீங்க.. ” என ஆம்புலன்ஸ் ஊழியர் ரொம்ப சலித்துக் கொண்டார்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த காவலர் அவர்களை நெருங்கிவிட்டார்.

ஆம்புலன்ஸ் ஊழியரிடம் விசாரித்தார்.

” மகாபலிபுரம் ஆக்ஸிடன்ட் கேஸ் இங்க தானே அட்மிட் பண்ணிருக்க..?”

“ஆமா சார்..”

” எப்படி ஆச்சு ? ஏதாவது டீட்டெல்ய்ஸ் தெரியுமா..? “

” சார்.. இந்த லேடி அங்க ரோடு கிராஸ் பண்றப்ப.. அங்க ரேஸ் விட்ட பசங்க அடிச்சுப் போட்டு போனதா .. அங்க இருந்தவங்க சொன்னாங்க .. வேற எதுவும் தெரியாது சார்..”

புகழேந்தியை பார்த்தவாறு அந்த ஊழியரிடம் விசாரித்தார்.

” இவரு யாரு அந்த லேடிக்கு ரிலேஷனா.. இல்ல அந்த ஆக்ஸிடன்ட் பண்ணுன குரூப்ப சேர்ந்தவரா..?”

” இல்லங்க சார்… இவரு பப்ளிக் தான் சார்… பேஷண்ட்டுக்கு ரிலேஷன் யாருனு தெரியலை சார்… நாங்கதான் கூட யாராவது வாங்கனு கூப்பிட்டோம். இவரு வந்து ஹெல்ப் பண்ணுனார். இவருக்கும் அந்த விபத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சார்… “

“ஏய் அந்த இன்வெஷ்டிகேஷன்ல்லாம் நாங்க பார்த்துக்குறோம்… நீ கையெழுத்து வாங்கிட்டியா… கிளம்பு… ” என அதிகார தோரணையில் சொன்னார்.

பயந்துபோன ஆம்புலன்ஸ் ஊழியர் வேறு வழியில்லாமல் அந்த இடத்தைக் காலி செய்தான்.

அந்த காவலர் புகழேந்தியை ஏற இறங்க ஒரு முறை பார்த்தார்.

” உங்க பேரு என்ன.? “

” புகழேந்தி சார்”

” என்ன வேலை செய்றிங்க…?”

” ஐடி கம்பெனியில வொர்க் பண்றேன் சார்…”

” மகாபலிபுரம் எதுக்கு வந்திங்க?”

” மனசு சரியில்ல அதான்…”

” கல்யாணம் ஆச்சா…?”

” இல்ல…”

” கல்யாணம் ஆனவனுக்குத்தான் ஆயிரம் பிரச்சனை இருக்கும்.. உன்ன மாதிரி பேச்சுலர்க்கு என்னய்யா பிரச்சனை.. என்ன லவ்வர் ஏமாத்திட்டு போய்டுச்சா..? ” என நக்கலாக கேட்டார்.

” சார் நீங்க தேவையில்லாம எதையோ பேசிட்டு இருக்கிங்க… எனக்குப் பெர்சனலா ஆயிரம் பிரச்சனை இருக்கும் அதெல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது. . ரோட்ல சாக கிடந்தவங்களுக்கு உதவி பண்ணுன என்கிட்ட குற்றவாளிய விசாரிக்கிற மாதிரி விசாரிக்கிறீங்க… ” என்று கோவப்பட்டான்.

” இப்ப எதுக்கு குரலை ஒசத்திப் பேசுற.. நான் கேக்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு… இல்ல… நீதான் ஆக்ஸிடன்ட் பண்ணுனேன்னு கேஸ போட்டு உள்ள தள்ளிருவேன்… ” என மிரட்டினார்.

பயந்து போன புகழேந்தி காவலரிடம் பவ்யமாக..

” சாரி சார்… இப்ப உங்களுக்கு என்ன வேணும்…? “

“இந்த லேடியை இதுக்கு முன்னால எங்காவது பார்த்துருக்கியா…?”

“இல்ல சார்… பார்த்ததில்ல… “

” பொய் சொல்லாம சொல்லு…”

” இல்ல சார் நிஜமாதான் சொல்றேன்… அந்த விபத்து நடந்தப்பதான் பார்த்தேன்… “

” சரி சரி… உன் அட்ரஸ், போன் நம்பர் இதுல எழுதிக் கொடு…” என்று ஒரு டைரியை நீட்டினார்.

அதில் தன்னுடைய முகவரியை எழுதினான்.

” எப்ப தேவைப்பட்டாலும் கூப்புடுவோம்.. உடனே ஸ்டேஷனுக்கு வரணும் ஓகே வா..”

” சரிங்க சார்..”

” கிளம்பு…”

புகழேந்தி கிளம்ப எத்தனித்த அதே வினாடி அவர்களிடம் ஒரு நர்ஸ் ஓடி வந்தாள்.

” சார்… சார்… நில்லுங்க..”

புகழேந்தி நின்றான்.

புரியாமல் நர்ஸைப் பார்த்தான்.

” அந்தம்மா ரொம்ப மோசமான நிலையில இருக்குறாங்க… உங்களைப் பார்க்கனும்னு சொல்றாங்க… கொஞ்சம் வாங்க சார்…” என்றாள்

” என்னையவா..? மேடம் அவங்க யாருன்னே எனக்குத் தெரியாது… என்னைய எதுக்கு அவங்க பார்க்கனும்…? “

” சார் அவங்க கூட ஆம்புலன்ஸ்ல நீங்க தானே வந்திங்க… உங்களைத்தான் அவங்க பார்க்கணும்னு சொல்றாங்க… வாங்க…”

புரியாமல் குழப்பத்தோடு அந்த நர்ஸ் பின்னால் சென்றான் புகழேந்தி. அவர்களுடன் அந்த காவலரும் சென்றார்.

அந்த அவசரப்பிரிவு வார்டில் நுழைந்ததும் சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தனர்.

அந்த பெண் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது.

அவளருகில் ஒரு இளவயது மருத்துவர் கவலை நிரம்பிய முகத்துடன் நின்றிருந்தார்.

” டாக்டர் .. இவருதான் ” என அங்கிருந்த மருத்துவரிடம் புகழேந்தியை காண்பித்தாள் அந்த நர்ஸ்.

” சார்.. நீங்க தான் இவங்களை அட்மிட் பண்ணுனிங்களா..? ” என புகழேந்தியிடம் அந்த மருத்துவர் கேட்டார்.

” இல்ல டாக்டர்… நான் சும்மா… வந்தேன்… ஒரு உதவி… நான்… எனக்கு… எதுவும்…” என வார்த்தைகளை மென்று துப்பினான்.

” சார்… சார்… இப்ப எதுக்கு பதட்டப்படுறீங்க…உங்க மேல யாரும் குத்தம் சுமத்தல.. நீங்க அவங்ளோட ஆம்புலன்ஸ் ல வந்தவர்தானே..?”

” ஆமா… டாக்டர்…”

” இவங்களுக்கு தலையில பலமான அடி… அதனால மூளைக்கு போற ரத்தம் ஸ்டாப் ஆகிருச்சு…  இவங்க கொஞ்சம் கொஞ்சமா நினைவுகளை இழந்துட்டு வர்றாங்க… உறுப்புகள் ஒவ்வொன்னா செயலிழந்துட்டு இருக்கு… மரணம் எப்ப வேணும்னாலும் வரலாம்… இந்த நிலைமையில.. இவங்க உங்க கிட்ட பேசனும்னு சொல்றாங்க… சாகப்போறவங்களோட கடைசி வார்த்தை என்னனுதான் கேளுங்களேன் சார்.. வாங்க இந்தம்மா பக்கத்துல வந்து இவங்ககிட்ட மெதுவா பேச்சு கொடுங்க.. வாங்க.. ” என்று அந்த மருத்துவர் சோகமாக சொன்னார்.

தயங்கியவாறு அந்தப் பெண் அருகில் அமர்ந்து ..
அவளிடம் பேச ஆரம்பித்தான் புகழேந்தி..,.

” நீங்க யாருங்க.? உங்களுக்கு என்ன பிரச்சனை..? உங்களுக்கு என்ன வேணும்..? என்கிட்ட என்ன பேசணும்..?” ஒருவித பரிதவிப்போடு புகழேந்தி கேட்டான்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நல்லாசிரியர் விருது இவர்களுக்கு மட்டும் தான்… தமிழக அரசு அதிரடி

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள் 12: ‘எல்லாம் நாடகம்!’

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள்: நாள் 2. எல்லாமே கதையா கோப்பால்?

பிக்பாஸ் நாட்கள்… நாள் 4: திருநங்கையின் வாழ்க்கை வலி!.

மகசூல் – பயணத் தொடர்… பகுதி 1

Pamban Mu Prasanth

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 2. திருவிழாக்கு போனேன்!.

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள்: 18 “பஞ்சபூதங்களும் பஞ்சாயத்துகளும்”

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம். பகுதி 4. தொழிற் கை முத்திரையின் வகைகள் (5 – 8)

பிக் பாஸ் நாட்கள்: நாள் 16: ‘நான் ஜெயிலுக்குப் போறேன்’

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 10. 24 வகை தொழிற்கை முத்திரைகள் – சிறு பயிற்சி.

பிக்பாஸ் நாட்கள். நாள் 14: “முதல் விக்கெட் நாடியா”

இரா.மன்னர் மன்னன்

”மரணத்துக்கு முந்தைய அமைதி!” மரணத்தின் விலை – தொடர். அத்தியாயம் 1.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment