கலைஞரின் பொற்கால ஆட்சியின் பொன்னான திட்டங்கள் – ஓர் பார்வை

SHARE

கலைஞர் என்று சென்னாலே ஊழல்தான் இருப்பதாக ஒரு கூட்டம் கூறிக்கொண்டு திரிகிறது. அவர் ஆட்சி என்றாலே விஞ்ஞான ஊழல்தான் , குடும்ப ஆட்சி இருக்கும் , வாரிசு அரசியல் இருக்கும் குறிப்பாக இலங்கை தமிழர் பிரச்சினையை கண்டு கொண்டதே கிடையாது என கருணாநிதி ஆட்சி என்றாலே ஊழல்தான் இருக்குமென முழங்கிவரும் தம்பிகளுக்கு சாரி தோழர்களுக்கு அதுவும் வேண்டாம் நபர்களுக்கு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட சாதனைகள் நாம் பார்க்கலாம்.

தமிழகத்தில் 40 ஆண்டுகாலம் தொடர்ந்து நீடித்த காங்கிரஸ் ஆட்சியை அகற்றி 1967 பொதுத் தேர்தலிலில் முதல் முறையாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடித்தது. வென்ற தொகுதிகள் 138 இடங்கள். அக்கட்சியின் பொதுச்செயலாளரான அறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்றார். இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி முதன்முறையாக ஆட்சி அமைத்த வரலாற்று சாதனையை திமுக அப்போது படைத்தது. 1969ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி அண்ணா மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார். 1969 முதல் 1971 வரையிலும் முதல்வராகப் பொறுப்பு வகித்த கருணாநிதி, அதற்கு பிந்தைய பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று 1971 முதல் 1976 வரை இரண்டாவது முறையாகத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பு வகித்தார்.

இந்த ஆட்சி காலத்தில், கருணாநிதி பல புரட்சிகர திட்டங்களை கொண்டு வந்தார்.மனிதர்களை மனிதனே இழுத்துச் செல்லும் வகையிலான கைரிக்ஷாக்கள் அப்போது அதிகளவில் இருந்தன. மனிதனை மனிதனே மாடு போல இழுத்துச்செல்வது சுயமரியாதைக்கு இழுக்கு என்பதால் கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டன. அவற்றிற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டன. இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்த தமிழகத் திட்டங்களில் இது. குடிசைகளில் வாழ்வோருக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தருவதற்காக குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை கருணாநிதி தொடங்கினார்.

இதன் மூலம் பெருநகரங்களில் குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கு வாழும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன. இத்திட்டமும் இந்திய அளவில் முன்னோடித் திட்டம்தான்.சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் மாநில ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றும் உரிமையுடையவர்களாக இருந்தனர். தேசிய அளவில், சுதந்திர தினத்தில் பிரதமரும், குடியரசு தினத்தில் ஜனாதிபதியும் கொடியேற்றும் உரிமையுடையவர்களாக இருக்கும்போது, மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தலைமை வகிக்கும் முதல்வர்களுக்கு கொடி ஏற்றும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர் கருணாநிதி.

இதனால், 1972ம் ஆண்டு சுதந்திரத்தின் வெள்ளி விழாவையொட்டி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தினத்தில் அந்தந்த மாநில முதல்வர்கள், தலைமைச் செயலகத்தில் கொடியேற்றுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த உரிமையைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி.அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, பார்வையற்றோருக்கு அறுவை சிகிச்சை செய்து கண்ணாடிகள் வழங்கும் கண்ணொளி திட்டம், பிச்சைக் காரர்கள் மற்றும் தொழுநோயாளிகளின் மறுவாழ்வுக்காக இரவலர் இல்லங்கள் அமைத்தது, இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் வேளாண் பல்கலைக்கழகம், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கென தனி அமைச்சரவை, நில உச்சவரம்பு சட்டம், விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி நிர்ணயம் , உயர் படிப்பு வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, விதவைகள் மறுமணத்திற்கு நிதியுதவி, கலப்பு மணத் தம்பதிகளுக்கு ஊக்கத் தொகை ஆகியவை 1969 முதல் 1976 வரையிலான கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் முற்போக்குத் தன்மை கொண்ட முக்கியமான மக்கள் நலத் திட்டங்கள் ஆகும்.

எம்ஜிஆர் ஆட்சி காலம் இடைமறித்த நிலையில், 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1989ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக தமிழக முதல்வரானார் கருணாநிதி. 1989முதல் 1991 வரையிலான இரண்டு ஆண்டுகாலம் மட்டுமே நீடித்த இந்த ஆட்சி அப்போதைய மத்திய அரசால் கலைக்கப்பட்டது.

இருப்பினும் இந்த இடைவெளியிலும் நிறைய மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறு மற்றும் குறு விவசாயிகளின் பாசன வசதிக்காக மின்மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 1989ல் நடை முறைக்கு வந்தது.1989ல் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று உயர்வதற்காக தமிழகத்தில் நிலவி வந்த இடஒதுக்கீட்டு அளவை 69 சதவீதமாக உயர்த்தியது கருணாநிதி தலைமையிலான அரசு. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20%, மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 30%, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18%, பழங்குடியினருக்கு 1% என 69% இடஒதுக்கீடு 1989 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.1989ம் ஆண்டு தர்மபுரியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முதன்முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டன.

பெண்கள் ஒருங்கிணைந்து சுயதொழில் வாய்ப்பைப் பெருக்கும் இத்திட்டம் இன்று மாநிலம் முழுவதும் பெரும் வளர்ச்சி கண்டு பெண்களை தற்சார்பு கொண்டவர்களாக மாற்றியுள்ளது. சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகைத் திட்டம், அரசு நிறுவனங்களின் பணியிடங்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு ஆகியவை இந்த 2 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட முக்கிய திட்டங்களாகும்.

தமிழக முதல்வராக 1996ம் ஆண்டில் நான்காம் முறையாகப் பொறுப்பேற்ற கருணாநிதி மற்றொரு புரட்சிகர திட்டத்தையும் அமல்படுத்தினார். மெட்ராஸ் என்று ஆங்கிலத்திலும் ஏனைய அன்னிய மொழிகளிலும் அழைக்கப்பட்டு வந்ததை மாற்றி சென்னை என அனைத்து மொழிகளிலும் அழைக்கும்படி பெயர் மாற்றம் செய்தார். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளை அவர்களே சந்தையில் விற்று நேரடியாகப் பலன் பெறும் வகையில் உழவர் சந்தைகளை தமிழகத்தின் பல பகுதிகளிலும் திறந்து வைத்தார் கருணாநிதி.தமிழர்கள் என்ற உணர்வை மறந்து சாதிவாரியாக மக்கள் பிரிந்திருப்பதை போக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சமத்துவபுர குடியிருப்புகளைத் திறந்து வைத்தார்.

பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுடன் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. குக்கிராம மக்கள் எளிதில் சுற்றியுள்ள நகரப் பகுதிகளை அடைவதற்கு வசதியாக தனியார் மூலம் சிற்றுந்துகள்/மினி பஸ்கள் இயக்கும் திட்டத்தை திமு.க அரசு நடைமுறைப்படுத்தியது.பள்ளி மாணவர்கள் தங்கள் கல்விக்காகப் பயணம் செய்வது சுமையாக இருக்கக்கூடாது என இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழகத்தில்தான் இப்படி முதல் முறையாக இலவச பஸ் பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பல கிராமப்புற ஏழை மாணவர்கள் இதனால் கல்வி பயின்று இன்று, நல்ல நிலைக்கு வந்துள்ளனர். ஆனால் பெற்ற பலன்களை அறியாத அவர்களில் சிலர், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற கோஷத்தில் மதி மயங்கியுள்ளன.

2006ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக ஐந்தாவது முறையாகப் பொறுப்பேற்றார் கருணாநிதி. 2006 மே 13ம் நாள் பதவியேற்பு விழா நடந்த மேடையில் வைத்தே, தனது தேர்தல் வாக்குறுதிப்படி 1 கிலோ அரிசி 2 ரூபாய், விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் 7000 கோடி ரூபாய் தள்ளுபடி, சத்துணவுத் திட்டத்தில் வாரம் இரண்டு முட்டைகள் ஆகிய திட்டங்களை நிறைவேற்றக் கையெழுத் திட்டு நடைமுறைப்படுத்தினார்.

தேர்தல் வாக்குறுதியின்படி , ரேஷன் கார்டுகள் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக கலர் டிவிக்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. விறகு அடுப்பு-மண்ணெண்ணெய் அடுப்பு இவற்றைப் பயன்படுத்தும் ஏழைப் பெண்கள் படும் அவதியைத் தவிர்க்கும் விதத்தில் அவர்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப் படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசாங்கம் என்ன செய்யவேண்டும் என ஐ.நா.மன்றம் வழிகாட்டியிருப்பதை இந்தியாவிலேயே முதன்முறையாகச் செயல் படுத்தியிருக்கும் மாநிலம் தமிழகம்தான். அண்ணா நூற்றாண்டு தொடக்க தினமான 2008ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி முதல் 1 கிலோ அரிசி 1ரூபாய் என்ற விலையில் மாதம் 20 கிலோ அரிசி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக, பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.

நிலக்கோளத்தின் ஈர்ப்பு விசை இயற்கையாய் இருப்பது போல் தமிழ் மொழியின் ஈர்ப்புவிசை எப்போதும் உள்ளது என்பதை உலகிற்கு உணர்த்தியது செம்மொழி மாநாடு கோவையில் அப்போதைய கருணாநிதி அரசால் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’ 2010ம் ஆண்டு ஜூன் 23-27 தேதி வரை நடைபெற்றது. இதில், பல்வேறு தலைப்புகளில் தமிழ்மொழி ஆராய்ச்சி கருத்தரங்குகள் நடந்தன.

தமிழர்களின் இசை, இலக்கியம், பண்பாட்டை விளக்கும் வகையில் வண்ணமயமான அலங்கார வாகன அணிவகுப்பு நடந்தது இந்த நிகழ்வு தமிழர்களின் பண்பாட்டினை மொழியின் சிறப்பினையும் உலகிற்கு சொல்லியது.கருணாநிதி நடத்திய அரசியல் இந்திய அரசியலில் பலருக்கும் பாடம். எல்லோரையும் அணைப்பார். மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களையும்கூட, மதித்தே வந்திருக்கிறார்.

மாற்றுக்கருத்து கொண்டோரையும்கூட தட்டிக்கொடுத்தே வந்திருக்கிறார். சீமானைக்கூட தன் சட்டைப்பையில் இருந்து பேனா எடுத்து எழுதும் அளவுக்கு, மதித்துள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளவும்.ஆம் , உண்மைதான் அவரின் ஆட்சியினை பார்த்துதான்அத்தனை தேசியத் தலைவர்கள், காவேரி மருத்துவமனையில் முகாம் கொண்டார்கள்.

அவ்வளவாக வெளியில் வெளிப்படாத தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரே நேரில் வந்தார். எடப்பாடியே தலைவர் கலைஞர்’ என்றார். குருமூர்த்தி அவர் ஆள வேண்டும்’ என்றார். எவரிடமும் எங்கும் பணியாத மம்தாவே, நான் தமிழக முதல்வரிடம் வேண்டுகிறேன். கருணாநிதிக்கு இடமளியுங்கள்’ என்று மன்றாடினார்.

கருணாநிதியைப் பழிப்போர், பழிக்கட்டும். அதற்கெல்லாம் அவரின் பற்றாளர்கள் மதிப்பளிக்க வேண்டியதில்லை. அதையெல்லாம், அவர் ‘பராசக்தி’ காலத்திலேயே கடந்துவிட்டார் ஏன் என்றால் அவர் கலைஞர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

யாரை பழிவாங்க இந்த கருப்பு உடை: நயன்தாரா உடைக்குப் பின் இப்படி ஒரு வரலாறா?

Admin

தமிழுக்கு அகரமுதலி தந்த வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று… யார் இந்த வீரமாமுனிவர்?

இரா.மன்னர் மன்னன்

முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கல

Admin

கொரோனா இரண்டாம் அலை – தற்காத்துக் கொள்வது எப்படி?

இளைஞர்களின் எனர்ஜி டானிக்..வீரப்பனுக்கு சிம்மசொப்பனம் … யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்?

Admin

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

உலகின் மிகச் சுவையான மாம்பழ வகை எது?

இதுதான் STING OPERATION ஆ? மதன் செய்த வேலைக்கு பெயர் என்ன?

Admin

எது கிருத்திகா உதயநிதிக்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளரா? – மெய்யெழுத்து FactCheck

Pamban Mu Prasanth

எஸ்.பி.ஐ சேர்மனை நீதிமன்ற காவலில் வைப்பதா? – தேர்தல் நன்கொடை பத்திர விவகாரத்தில் நடப்பது என்ன?

Pamban Mu Prasanth

‘மு.க.ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்

Admin

ஆரத்திக்கு பணம்: ஆட்சியரின் நடவடிக்கை திட்டமிட்ட கூட்டுசதியா? அதென்ன 5 கோடி அண்ணாமலை?

Pamban Mu Prasanth

Leave a Comment