கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக – அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் ஒரே பாட்டி நடித்து இருந்தார்.
பின்னர் அது குறித்து ஊடகங்கள் விசாரித்த போதுதான் அவர் பெயர் கஸ்தூரி பாட்டி என்பதும் தொழில் முறையில் விளம்பரங்களில் நடித்தவர் என்பதும் தெரிய வந்தது.
இந்த சம்பவமானது பலம் பொருந்திய அரசியல் கட்சிகள் எவ்வளவு நாடகத் தனமாக விளம்பரங்களை உருவாக்குகின்றன என்பதை ஒரு விவாதப் பொருளாக்கியது.
ஆனால் அந்த சம்பவத்தில் இருந்து தமிழக அரசியல் கட்சிகள் எந்தப் பாடத்தையுமே கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலுக்கான போஸ்டர் விளம்பரங்கள் காட்டுகின்றன.
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/03/ad-111-copy.jpg)
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/03/ad-111-copy.jpg)
இந்த போஸ்டர் விளம்பரங்களிலும் திமுக-அதிமுக ஆகிய இரண்டு தரப்புகளும் ஒரே பெண்ணின் புகைப்படத்தைப் பயன்படுத்தி உள்ளனர். கடந்த முறை கஸ்தூரிப் பாட்டி ‘அது என்ன கட்சி விளம்பரம்-ன்னு கேட்காம நடிச்சுட்டேன்’ என்று விளக்கம் கொடுத்து இருந்தார்.
இம்முறை இந்தப் பெண் ஏன் ஒரு கட்சியின் விளம்பரத்தில் நடித்ததை இன்னொரு கட்சிக்கு சொல்லவில்லை? – என்ற சந்தேகம் எழுந்தது, ஆனால் இதில் அந்தப் பெண்ணின் தவறு எதுவும் இல்லை.
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/03/162084892_1857894641039893_1519700496893732425_n.jpg)
![](https://meiezhuththu.com/wp-content/uploads/2021/03/162084892_1857894641039893_1519700496893732425_n.jpg)
புகைப்படங்களை விற்கும் தளமான ‘ஷட்டர் ஸ்டாக்’ என்ற தளத்திற்கு அந்தப் பெண் கொடுத்த புகைப்படத்தைதான் திமுக, அதிமுக ஆகிய இரண்டு தரப்பினரும் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி உள்ளனர்.
இதைப் பார்த்து, ‘சரியான விளம்பர நிறுவனங்களை பயன்படுத்தாததால் இரண்டு பெரும் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் கேலிக்கு உள்ளாவது வாடிக்கையாகி வருகின்றது’ – என்கின்றனர் சமூக வலைத்தளவாசிகள்.
நமது நிருபர்.