இந்தியாவில் சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாகக் காரணமான சுந்தர்லால் பகுகுணா மறைந்தார் – யார் இவர்?

SHARE

இந்தியாவில் பல்லாயிரம் மரங்கள் பாதுகாக்கப்படவும், பலநூறு ஆதிவாசி இனங்கள் இன்னும் உயிர்த்திருக்கவும் காரணமான சூழலியல் போராளி சுந்தர்லால் பகுகுணா தனது 94ஆவது வயதில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இன்று மறைந்திருக்கிறார்.

1927ல் உத்திரகாண்ட் மாநிலத்தில் பிறந்து, இள வயதில் காந்தியடிகளைப் பின்பற்றிய பகுகுணா 1974ஆம் ஆண்டில் உத்தரகாண்டில் சில ஆதிவாசிப் பெண்கள் நடத்திய சிப்கோ போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார்.

சிப்கோ என்ற சொல்லுக்கு ஒட்டிக் கொள்ளுதல் என்பது பொருள். உத்தரகாண்ட் மாநிலத்தின் காட்டுப்பகுதிகளில் மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த மரங்களை வெட்டிக் கொள்ள அன்றைய காங்கிரஸ் அரசு சில தனியாருக்கு அனுமதி அளித்தது. இதனைத் தடுக்க உத்தரகாண்ட் மாநிலத்தின் பெண்கள் அந்த மரங்களைக் கட்டிப் பிடித்து ஒட்டி நின்றனர். எங்களை வெட்டிய பின்பு மரத்தை வெட்டிக் கொள்ளுங்கள் என்றனர். கோடாரிகள் ஓங்கப்பட்டபோதும் அவர்கள் கலங்கவில்லை. இதனால் அந்தப் பகுதியில் ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை. இப்படியாகத்தான் உருவானது சிப்கோ போராட்டம். 

முன்னதாக 1730ஆம் ஆண்டில் இதே சிப்கோ போராட்டத்தை பிஷ்னோய் இன பெண்கள் ஜோத்பூர் அரசரின் மரம் வெட்டும் திட்டத்துக்கு எதிராக மேற்கொண்டிருந்தனர். அப்போது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டபோதும் பெண்கள் போராட்டத்தில் பின்வாங்கவில்லை. அவர்களின் பிணங்களின் மீது ஏரி நின்றுதான் மரங்கள் வெட்டப்பட்டன. அதன் தொடர்ச்சிதான் இந்தப் போராட்டம்.

உறுதிமிக்க இந்தப் போராட்டத்தை மேற்கொண்டவர்கள் போதிய கல்வியற்ற பழங்குடிகள் என்பதாலும், இவர்களை சட்டம் மூலம் மத்திய அரசு ஒடுக்கிவிடக் கூடாது என்பதாலும் இவர்களுக்கு நேரில் சென்று வழிகாட்டினார் சுந்தர்லால் பகுகுணா. சிப்கோ போராட்டத்தை ஒரு வலுவான இயக்கமாக மாற்றினார். 

இமய மலைப் பகுதியில் உள்ள மரங்களைக் காக்க, 5,000 கிலோ மீட்டர்களுக்கு நெடுந்தூர நடை பயணம் மேற்கொண்டார். இதனால் அப்போது தொழில் வளர்ச்சி குறித்து மட்டுமே பேசிக் கொண்டிருந்த ஊடகங்கள் முதன்முறையாக சூழலியல் குறித்து பேசத் தொடங்கின.

1980ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திராகாந்தி பகுகுணாவின் போராட்டங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாகவே சுற்றுச் சூழலுக்கு ஒரு துறையை ஏற்படுத்தினார், பின்னர் அது சுற்றுச் சூழல் அமைச்சகமானது!.

தொடக்கத்தில் ஆதிவாசி ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமான இயக்கமாக சிப்கோ இயக்கம் இருக்க வேண்டும் என இவர் கருதினாலும், மது மற்றும் பணம் ஆகியவற்றுக்காக இவர் கூடவே இருந்த பலர் இடம் மாறியதால் அந்த முயற்சியைக் கைவிட்டார்.

ஆதிவாசிப் பெண்கள் அன்பின் பிறப்பிடமாகவும் சத்தியத்தை மீறாத உறுதி உள்ளவர்களாகவும் இருப்பதைக் கண்டு, பெண்கள் குழுக்கள் மூலமே தனது போராட்டங்களை முன்னெடுத்தார். இவர் வழிநடத்திய பெண்கள் குழு அப்போது ’லேடி டார்ஜான் குழு’ என்று அழைக்கப்பட்டது. ஆதிவாசிகளைக் கொண்டு சூழலைப் பாதுகாத்ததோடு ஆதிவாசிகள் தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்றும், சட்டத்திற்கு உட்பட்டு போராட்டங்களை முன்னெடுப்பது எப்படி என்றும் சுந்தர்லால் பகுகுணா அவார்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

இடிந்தகரையோ, தூத்துக்குடியோ, நெடுவாசலோ மக்கள் தங்கள் வளத்தைப் பாதுகாக்க இன்று தாங்களே கூடுகிறார்கள் என்றால் அதன் பின்னே பகுகுணா உருவாக்கிய விழிப்புணர்வு உள்ளது.

இவரது சேவைகளைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ, பதம பூஷண் ஆகிய விருதுகளை அளித்துள்ளது. ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி. இவருக்கு சமூக அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது.

இயற்கையை மனிதன் அழித்தால் இயற்கை மனிதனை அழிக்கும் என்றும், காடுகளைப் பாதுகாப்பதே நிலையான பொருளாதாரம் என்றும் முழங்கிய பகுகுணாவின் இழப்பு இந்திய சூழலியல் துறைக்கு மிகப்பெரிய பேரிழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

  • இரா.மன்னர் மன்னன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண்கள் தின வாழ்த்தெல்லாம் நாடகமா? இதுதான் திராவிட மாடலா?

Admin

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…!!

Admin

தனது மகளையே மரத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்த பெற்றோர் – பதறவைக்கும்வீடியோ!

Admin

ஏப்ரல் 19 வேண்டாம்… தேதியை மாத்துங்க – தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

Admin

ஒரு நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா!: உச்சபட்ச பாதிப்பில் இந்தியா!

மலையாள நடிகை அனுபமா தேர்ச்சி? – பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் நடந்த குழப்பம்

Admin

90% மக்களிடம் கைபேசிகள்… தமிழ்நாடு வளர்ந்த மாநிலம்… – நிதியமைச்சர் சொல்வது சரியா?

ட்விட்டர் ஒரு ஆபத்தான விளையாட்டு : ராகுல்காந்தி விமர்சனம்!

Admin

மீண்டும் வெளிநாட்டுப் பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி

Admin

காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

Admin

ஏன் பாஜகவில் சேர்ந்தேன்? காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

Pamban Mu Prasanth

இந்தியாவுக்குள் மீண்டும் நுழைகின்றதா டிக்டாக்?

Admin

Leave a Comment